Make money doing the work you believe in
நாய் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ?
பேரா.காமகோடியைக் குறிக்கும் விதமாகப் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பிரியங்கா வதேரா சொன்ன கருத்தைக் கண்டித்து ஒரு தமிழ் எழுத்தாளரும் எழுதவில்லை. அவரது பெயர் காமகோடியாக இல்லாமல், கமால், ஜோசஃப் என்று இருந்திருந்தால் இந்நேரம் தமிழ் உணர்வாளர்கள் கழுத்தறுத்துக் கொண்டு உயிர்விட்டிருப்பார்கள். மரீனாவில் உண்ணாவிரதம் துவங்கியிருப்பார்கள். ஐயோ, என் தமிழனுக்கு நேர்ந்த இழிவைக் கண்டு இன்னும் உயிரோடு இருக்கிறேனே என்று பொங்கி வழிந்து, விடுதலை, ஹிந்து, ஜனசக்தி, எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், இந்து தமிழ் திசை என்று எல்லாவற்றிலும் கட்டுரைகள் கொட்டியிருக்கும். ஸ்டாலின், வைகோ, கனிமொழி, பழனிசாமி, உதயநிதி, ஜோசஃப் விஜய், திருமாவளவன், சைமன் செபாஸ்டியன், பாஜக என்று அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.
ஆனால், அவதூறு செய்யப்பட்டது அரசு அதிகாரி. உயர் கல்விக் கழகத்தின் தலைவர். அவரது பெருமைகளைச் சொல்வதற்கு ஒரு கையேடு போட வேண்டும். பாஸ்போர்ட் எடுக்காதவர். அல்பசங்கி போவதற்குக் கூட அமெரிக்கா போகும் 8ம் கிளாஸ் படித்த அரசியல்வாதிகள் மத்தியில் கணினித்துறையில் பி.எச்.டி. முடித்து, 50+ காப்புரிமைகளை இந்தியாவில் இருந்தபடியே பெற்று பல நூற்றுக் கணக்கான பி.எச்.டிக்களுக்கு வழிகாட்டுகிறவர். வாட்ஸப் நிறுவனத்துக்கு ஆப்பு சொருகியவர். சக்தி என்கிற ப்ராஸசர் வடிவமைத்தவர். வெளியே சொல்ல முடியாத ராணுவ ஆராய்ச்சிகளுக்கு உதவுபவர். பத்மஶ்ரீ. இவரது தலைமையில் தான் ஐ.ஐ.டி. சென்னை தான்சானியாவில் கிளை துவக்கியது. சில நாடுகளில் துவக்க உள்ளது. அனைவருக்கும் ஐ.ஐ.டி என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். சுந்தரேசன், பாஸ்கர் ராமமூர்த்தி, ஜுன்ஜுன்வாலா என்கிற ஜாம்பவான்களுக்குப் பிறகு ஐஐடியின் தலைமைப் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்.
இத்தனைக்கும் மேல் இவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
ஆனாலும் இவர் மீது ஒரு அவமதிப்பு நிகழ்ந்தால் அதை கேட்க ஒரு தமிழக அரசியல்வாதிக்கும் திராணி இல்லை. வெட்கம் இல்லாமல் ஊடகங்கள் கடந்து செல்கின்றன. ஒரு தமிழ் எழுத்தாள சிரோன்மணியும் மானம் ரோசம் வற்றிப் போய் வாய் திறகக்வில்லை.
காரணம் கேலிசெய்யப்பட்டவர் ப்ராம்மணர். அவரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தகுதி எதுவுமே இல்லாத யாரும் என்ன சொன்னாலும் கேட்க நாதி கிடையாது. இதில் முற்போக்கு, இடது சாரி, திராவிடம் என்று முச்சந்தியில் நின்று வெட்கம் சிறிதும் இல்லாமல் அலப்பறை செய்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஒரு வகையில் காந்தி போல் தான். வேறு எந்தத் தலைவரைப் பற்றியும் எதுவும் சொல்லிவிட முடியாது. ஆனால், காந்தியைக் காமுகன், ப்ரிட்டிஷ் ஏஜெண்ட் என்று எதையும் சொல்லலாம். ஏனெனில் காந்தி சாதி என்று ஒன்றும் இல்லை. அதற்குச் சங்கமும் இல்லை. காந்தியைச் சொன்னால் கேட்க நாதி இல்லை. அதே நிலை தான் பேரா.காமகோடிக்கும்.
இந்தக் கேடுகெட்ட தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கேட்க மாட்டார்கள். உண்மையைக் கேட்க முதுகெலும்பில்லை. இதைக் கேட்டால் ஹிந்துவில் எழுத முடியாது, அதைச் சொன்னால் இடதுசாரிப் புத்தகப் பதிப்பகங்கள் புறக்கணிக்கும், இப்படிச் சொன்னால் திராவிட இயக்க ஊடகங்கள் கண்டுகொள்ளாது. எனவே காமகோடி தமிழ் மண்ணின் உயரிய உதாரணமாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பைப் பற்றிப் பேசவே மாட்டேன் என்று ஒரு எழுத்தாள, அரசியல் சமூகம் இருக்குமானால், அதில் நானும் ஒரு அங்கம் என்று நபும்ஸகத்தனமாக நடமாட என்னால் முடியவில்லை.
உண்மையைச் சொல்வதும், அதை உரக்கச் சொல்வதும் எழுத்தாளனின் பணி என்பது பாரதி பாணி. அவன் வழியில், நான் இந்த உண்மையைச் சொல்கிறேன்.
பேரா.காமகோடியை இழிவு செய்வதாக நினைத்து திமிர்த்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசிய பிரியங்கா வதேராவிற்குக் கடுமையான கண்டனங்கள். அதற்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்க வக்கில்லாத தமிழ் எழுத்தாளர் சமூகத்திற்கும், அரசியல் சமூகத்திற்கும் பாரதியின் பாடலில் இருந்து ஒரு வரி: "நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ?"
ப்ரியங்கா வதேராவிற்கு ஒரேயொரு கேள்வி : பேரா.காமகோடி கோமூத்ர ஞானியாக இருக்கட்டும். அந்த ஒரு தகுதி மட்டுமே கொண்டவராக இருக்கட்டும். உங்களிடம் என்ன தகுதி உள்ளது ?
-ஆமருவி
31-07-2026
